இந்தியாவினை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி!

Thursday, January 20th, 2022

இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய ௲ தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று(புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ம வீரர்களான மலன் 6 ஓட்டங்களிலும், குயின்டன் டி காக் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

மார்க்ராம் 4 ஓட்டத்தினை மட்டுமே சேர்த்து ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ஆனால், அணித்தலைவர் டெம்பா பவுமா- ராசி வான் டெர் டுசன் ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை மளமளவென உயர்த்தினர்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசினர். தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்களை குவித்தது. டெம்பா பவுமா 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ராசி வான் டெர் டுசன் 129 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும், களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

இதையடுத்து 297 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, முதலில் கவனமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராகுல் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும், ஷிகர் தவான்- விராட் கோலி இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். தவான் அரை சதம் கடந்து, தனது ஆட்டத்தை தொடர்ந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 138 ஆக இருந்த நிலையில் இந்த ஜோடியை மகராஜ் பிரித்தார். அவரது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் மொத்தம் 84 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 51 ஓட்டங்களை பெற்றிருந்த போது பெவிலியன் திரும்பினார்.

அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிரடியாக ஆடத் தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன.

நெருக்கடியாக கடைசிகட்டத்தில் கடுமையாக போராடிய ஷர்துல் தாக்கூர் பவுண்டரியாக விளாசினார். எனினும், இந்திய அணியால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 265 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷர்துல் தாக்கூர் 43 பந்துகளில், 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ஓட்டங்களை குவித்தார்.

000

Related posts: