இத்தாலி தகுதி பெறுவதில் நெருக்கடி!

Monday, November 13th, 2017

உலக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டத்தில் ஸ்வீடனிடம் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதையடுத்து 1958-க்குப் பிறகு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்வீடன், சோல்னாவில் நடைபெற்ற இந்த பிளே ஆஃப் போட்டியில் ஸ்வீடன் பதிலி வீரர் ஜேகப் ஜொஹான்சன் கோல் அடித்தார், ஆனால் இத்தாலியினால் ஸ்வீடனின் வலுவான தடுப்பு வியூகத்தை ஒருமுறை கூட ஊடுருவ முடியவில்லை.இதனையடுத்து சான்சிரோவில் அடுத்த சுற்று பிளே ஆஃப் போட்டியில் இதே ஸ்வீடன் அணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால்தான் உலகக்கோப்பையில் தகுதி பெறும் வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் தோய்வோனென் த்ரோ இன் பந்து ஒன்றை தனக்குச் சாதகமாக்கி சக வீரர் ஜேகப் ஜோஹான்சனுக்கு அளித்தார், இவரது ஷாட் டேனியல் டி ரொசி மேல் பட்டு கோலுக்குள் சென்றது இத்தாலி கோல் கீப்பர் கியான்லுகி பஃபான் தடுக்க முடியவில்லை. இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.சமன் செய்ய அதிகம் மோதிய இத்தாலிக்கு ஒரே வாய்ப்பு மத்தியோ டார்மியன் மூலம் கிடைத்தது, ஆனால் தூரத்தில் இருந்து அடித்த ஷாட் கோல் போஸ்டையே அசைக்க முடிந்தது.

ஸ்வீடன் அணியில் மார்கஸ் பெர்க், ஒலா தோய்வோனென் ஆகியோர் இத்தாலியை படுத்தி எடுத்தனர்.அடுத்து இத்தாலி மிலனில் நடக்கும் போட்டியில் இத்தாலி கடுமையாக ஆடி கோல் இடைவெளியில் ஸ்வீடனை வீழ்த்த வேண்டியுள்ளது, இல்லையெனில் ஸ்வீடன் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்ய உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும்.இதற்கிடையே மற்றொரு தகுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்று வீழ்த்தி செனகல் அணி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.

Related posts: