ஆசிய தடகள போட்டியில் இந்துனில்லுக்கு முதலிடம்!
Thursday, April 27th, 2017
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டிகளில் முதலாம் கட்டத்தில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத் முதலிடத்தை வென்று சாதித்துள்ளார்.
இவர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டே குறித்த வெற்றியைப் பதிவுசெய்துள்ளார். அவர் பந்தயத் தூரத்தை 1.50 நிமிடம் 69 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடத்தை வென்றுள்ளார்.
அதேபோல் தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் ஹிமேஷ எஷான் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அண்மைக்காலங்களில் சிறப்பாக செயற்பட்ட ஹிமேஷ எஷான் பந்தயத் தூரத்தை 10.43 செக்கன்களில் ஓடி முடித்துள்ளார். முதல் கட்டப் போட்டிகளில் பங்குப்பற்றிய கயந்திகா 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பந்தயத் தூரத்தை 2.3.78 நிமிடங்களில் ஓடி முடித்து மூன்றாமிடத்தைப் பெற்றார்.
சீனாவில் நடைபெற்றுவரும் கிராண்ட் பிரிக்ஸ் முதலாம் கட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக 11 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். 11 பேரில் 6 வீரர்களுடன் 5 வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். முதலாம் கட்ட மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாயின. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயரம் பாய்தல் வீரர் மஞ்சுள குமார, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ஒலிம்பிக் வீரர் சுமேத ரணசிங்க, வருண லக்ஷான் ஆகிய இருவரும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மேலும் இலங்கை சாதனை நாயகி கயந்திகா அபேரட்ன, நிமாலி லியனாராச்சி ஆகிய இருவரும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|