அறிவுரை கூறியதால் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார் யூனிஸ்கான் – கிராண்ட் ப்ளவர் தெரிவிப்பு!

Friday, July 3rd, 2020

துடுப்பாட்டம் பற்றி அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான் தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் ப்ளவர். இவரும் இவரது மூத்த சகோதரரான ஆண்டி ப்ளவரும் அந்த நாட்டிற்காக சேர்ந்து விளையாடி சாதனைகள் படைத்துள்ளனர்.

தனது ஓய்விற்குப் பிறகு கிராண்ட் ப்ளவர் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியைத் தொடங்கினார். கடந்த 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் துடுப்பாட்ட அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான் தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் தொடர்பான உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, காலை உணவு சாப்பிடும் தருணத்தில் பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கானுக்கு துடுப்பாட்டம் தொடர்பாக அறிவுரை கூறினேன்.

என்னை விட அவரது டெஸ்ட் போட்டி அனுபவம் அதிகம் என்று நினைத்தாரா என்று தெரியாது; நான் கூறிய அறிவுரையை அவர் நல்லவிதமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார். அப்போது அங்கு இருந்த அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவை எல்லாம் பயிற்சியாளர் வாழ்வில் நடக்ககூடிய ஒன்றுதான் அதன்பிறகு அங்கு பணிபுரிவது கசப்பான ஒரு அனுபவமாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Related posts: