அதிகரித்த வெப்பம்: பாதியில் வெளியேறிய டென்னிஸ் வீரர்கள்!

Thursday, August 30th, 2018

அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில், கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் ஐந்து வீரர்கள் ரிட்டையர்டு மூலம் வெளியேறியுள்ளனர்.

அமெரிக்காவில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்திற்கான, இந்த ஆண்டின் கடைசி தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முன்தினம் தொடங்கியது.

தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து, 2வது சுற்றுக்கான ஆட்டங்கள் தொடங்க உள்ளன. அமெரிக்காவில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரைப் பொறுத்தவரை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்று செட்டுகளை கைப்பற்றினால் தான் வெற்றி பெற முடியும். ஆனால், இதில் பெரும்பாலான ஆட்டங்கள் நான்கு அல்லது ஐந்து செட்கள் வரை நீடிக்கிறது.

இதன் காரணமாக வீரர்கள் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் விளையாட வேண்டியிருந்தது. ஆனால், கடுமையான வெப்பத்தை வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. சிலர் ஐஸ் கட்டியை சுற்றிய துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு வெப்பத்தை தணித்தனர்.

ஆனால், சில வீரர்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் ஆட்டத்தை விட்டு வெளியேறினர். நேற்றை 2ஆம் நாள் ஆட்டத்தின்போது மட்டும் 5 வீரர்கள் ரிட்டையர்டு மூலம் வெளியேறினர்.

ருமேனிய வீரர் மேரியஸ் காபில் 5-7, 1-6 என இரண்டு செட்களை இழந்த போதும், 1-1 என மூன்றாவது செட்டில் சமநிலை வகித்தபோது வெளியேறினார். லித்துனியாவின் ரிச்சர்ட்ஸ் பெராங்கிஸ் 4வது செட்டில் வெளியேறினார்.

இவர்களைப் போல, இத்தாலி வீரர் ஸ்டெபனோ டிராவாக்லியா மற்றும் செர்பிய வீரர் லாஸ்லோ டேர் ஆகியோர் 4வது செட்டில் வெளியேறினர்.

கனடா வீரர் பெலிக்ஸ் ஆகெர் அலியாசிம் 1-1 என சமநிலையில் இருக்கும்போது, 3வது செட்டோடு வெளியேறினார். வீரர்கள் இவ்வாறு பாதிலேயே வெளியேறியது அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒருங்கிணைப்பாளருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: