மூன்று மாதங்களில் 8 மில்லியன் வீடியோக்களை அகற்றிய பதிவுசெய்த யூடியூப் !

Wednesday, April 25th, 2018

வன்முறை மற்றும் பார்க்கத்தகாத உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன்பேரில் யூடியூபின் சமூகத் தரநிலைகளை மீறும் 8.3 மில்லியன் வீடியோக்களை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால இடைவெளியில் மட்டும் அகற்றியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.

தீவிரவாத கருத்துக்களைக் கொண்ட மற்றும் மற்றவர்களை துன்புறுத்துவதைக் காட்டும் வீடியோக்களை அகற்ற இயலாத நிலையில் இருப்பதாக யூடியூப் மட்டுமின்றி பல இணைய நிறுவனங்களின்மீது குற்றச்சாட்டுகளை பல நாடுகளின் அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்வைத்துள்ளதால் அவை அதிக அழுத்தத்திற்குள்ளாகியுள்ளன.

எனவே இது குறித்து தாங்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டோம் என்பதைக் காட்டும் முதல் படியாகவே இதை அறிவிப்பதாக யூடியூப் தெரிவித்துள்ளது.

யூடியூப் அது வெளியிடும் உள்ளடக்கங்களுக்காகவும் பலத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டபோது உயிர் பிழைத்ததாக பேட்டியளித்தவர்கள் மாணவர்களே அல்ல, அவர்கள் நடிகர்கள் என சிலர் கூறியிருந்த கருத்துகள் விளம்பரப்படுத்தப்பட்டன.

இதுபோன்ற தவறுகளை தவிர்ப்பதற்காக விக்கிப்பீடியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.முரண்பாடான வீடியோக்களை அகற்றும் முறையானது,

முதலாவது அவை சந்தேகத்திற்குரியவையாக குறிக்கப்படுகின்றன.பின்னர் அவை சமூகத் தரநிலைகளுக்கு உட்பட்டவையா என்பதை அறிய பார்வையிடப்படுகின்றன.

பின்னர் அவை அகற்றப்படவேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படுகிறது.

தானியங்கி அமைப்பு ஒன்று வீடியோக்களை சந்தேகத்திற்குரியவையாகத் தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில், மனிதர்களும் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இரண்டு கூட்டத்தினர் இதில் பயன்படுத்தப்படுகிறார்கள், ஒன்று யூடியூபை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், இன்னொன்று நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்பாளர்கள்.

மனிதர்கள் கண்டுபிடிக்கும் வீடியோக்களில் பாதிக்கும் மேல் “ஸ்பேம்” வகையைச் சேர்ந்தவை அல்லது பாலியல் தொடர்பானவை என்று தெரியவந்துள்ளது.

Related posts: