பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட பேஸ்புக்!

Tuesday, June 5th, 2018

பயனாளர்களின் தகவல்களை அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் பிரபலமாவதற்கு முன்பாகவே, உலகின் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட 60 முன்னணி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதன்படி பேஸ்புக் செயலியை குறிப்பிட்ட அலைபேசி நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்த அந்தரங்கத் தகவல்களை, பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிந்து கொண்டுள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் நிறுவனம் தனது வீச்சினை அதிகப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக்கின் சிறப்பு வசதிகளான மெஸெஞ்சர் மற்றும் அட்ரஸ் புக் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தது.

ஆனால் பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் ‘மத்திய வணிக ஆணையம்’ என்னும் சுதந்திர அமைப்புடன், பேஸ்புக் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிரானது என கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னதாக ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா’ என்னும் தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் தகவல்களை பகிந்து கொண்டது சர்ச்சைகளை உண்டாக்கியது. அதில் முதலில் பயனாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்களின் தகவல்களும் பகிரப்பட்டது.

பின்னர் பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் நண்பர்களின் தகவல்களை பகிர்வதை நிறுத்தி விட்டது. ஆனால் அலைபேசி நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இத்தகைய ஒப்பந்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட தன்மையுடையவை என்றும், இதன் மூலம் மிகவும் குறைவான அளவே தவறுகள் நிகழ்ந்தது தங்களுக்குத் தெரியும் என்றும் பேஸ்புக் நிறுவன துணைத் தலைவர்களில் ஒருவரான ஐம் ஆர்ச்சிபோங் தெரிவித்துளார்.

Related posts: