90 வீதமானவர்கள் தபால்மூல வாக்கினை பதிவு செய்துள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Monday, July 20th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை  தவறவிட்டவர்கள் இன்று திங்கட்கிழமை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதற்கமைய, இன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது தேர்தல் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் தபால்மூல வாக்கினை செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவு, தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், பொலிஸ்துறையினர், பாதுகாப்பு படையினர், அரச துறையினர் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களாக தபால் மூல வாக்கினை செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த தபால் மூல வாக்கினை செலுத்த தவறியவர்களுக்கே இன்றும், நாளையும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை 90 வீதமானவர்கள் தபால்மூல வாக்கினை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 93 விதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுத்தேர்தல் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ராஜாங்கனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவினைத் தவிர்ந்த ஏனைய சகல பகுதிகளிலும் கடந்த 13ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

இதேநேரம் இம்முறை 705,085 வாக்காளர்கள் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: