50 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிப்பு!

Friday, February 28th, 2020

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறி உள்ளது.

பலரை பலி கொண்டுள்ள இந்த கொரோனோ வைரஸை உலக சுகாதார அமைப்பு ஒரு தொற்று நோயாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸால் இதுவரை 2858 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் இருந்து வைரஸ் பரவத் தொடங்கியது.

இது தற்போது உலகளாவிய ரீதியில் மொத்தம் 83,342 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன.

சீனாவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தாக்கம் தென் கொரியாவில் அதிக அளவில் உள்ளது. தென் கொரியாவில் 2022 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளன. மேலும் 13 பேர் இதுவரை வைரஸால் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஈரான் மற்றும் இத்தாலியை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 655 பேர் இருப்பதாகவும், அதை தவிர 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஈரானில் 245 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரானில் உள்ளூர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவர் மொஜ்தாபா சோனூருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இப்போது உலகில் 50 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் 93, தாய்லாந்தில் 40, தைவான் 32, பஹ்ரைன் 26, குவைத், அவுஸ்திரேலியா 23, மலேசியா 22, பிரான்ஸ் 18, ஜெர்மனி 18, இந்தியா 3, பிரேசில் 1, எகிப்து 1, ஜார்ஜியா 1 உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த 83,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நாடுகளில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் பதற்றமும் அதிகரித்து உள்ளது.

Related posts: