2022 உயர்தரப் பரீட்சையை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, January 11th, 2023

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 300,000 இற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உன்னிப்பாக மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று மாவட்ட செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தேக்க நிலையில் இருந்த பொருளாதாரம் தற்போது இயங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமர், பொருளாதாரம் மற்றும் சேவைப் பொறிமுறைகள் சிரத்தையுடன் செயற்படும் போது அனைத்து சவால்களையும் சமாளிக்கும் வகையில் அரச அதிகாரிகளின் பொறுப்பு அதிகமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 10,100 பாடசாலைகளில் பாதிக்கும் மேற்பட்ட பாடசாலைகள் 1-12 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர், அத்தகைய நிலங்களை குறுகிய கால பயிர் செய்கைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் உற்பத்தியை நோக்கி மாற்றுவதில் குறைபாடுள்ள அம்சங்களை ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் தீர்மானிப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.

உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு மாவட்டச் செயலாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பரீட்சைகள் ஆணையாளருக்கு மாத்திரம் பொறுப்புகள் வழங்கப்படக் கூடாது எளவும், கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உட்பட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களுடனும் ஒற்றுமையாகச் செயற்படுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

உயர்தரப் பரீட்சையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதில் தாமதத்தை எதிர்கொள்வார்கள் என்றும், பல்வேறு சூழ்நிலைகளால் பரீட்சை ஏற்கனவே தாமதமாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது. பல சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாகவும், கல்வித் துறையின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: