2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

Wednesday, November 18th, 2020

இலங்கையின் 75 ஆவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டின் 75 ஆவது வரவுசெலவுத் திட்டம் நேற்று (17) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (18) ஆரம்பமாகவுள்ள குறித்த வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதிவரை  நடைபெறவுள்ளது.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படும். அதன்படி இன்றுமுதல் 20 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் காலை 9.30 மணி தொடக்கம் 5.30 மணிவரை இடம்பெறும்.

இதன் பின்னர் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதிமுதல் டிசம்பர் 10ஆம் திகதிவரை நடத்தப்படும். மேலும் அன்று பிற்பகல் 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

2021 ஆம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. அதன்பின்னர், ஒக்டோபர் 20ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2021 ஆம் நிதி ஆண்டில் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு 2678 பில்லியன் ரூபாவையும் இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ 2900 பில்லியன் ரூபாய் வரையறைக்கு உட்பட்டதாகக் கடன்களைத் திரட்டுவதற்காகவும் ஒதுக்கீட்டுச்சட்டமூலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: