20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான உயர் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு!

Monday, October 5th, 2020

20 ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலத்தில் சில சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுக்களை கவனத்தில் கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைகள் உயர் நீதி மன்றத்தில் இன்று நிறைவடைந்துள்ளன.

இதற்கமைவாக 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்துக்கான உயர் நீதி மன்றத்தின் வரையறை தொடர்பான விடயங்கள் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு எதிர்வரும் தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம் நான்காம் நாளாகவும் இந்த மனு உயர் நீதி மன்றத்தினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் விளக்க உரையும் நிறைவடைந்துள்ளது.

குறித்த திருத்தத்திற்கு எதிராக 39 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், 20 பேர் திருத்தத்திற்கு சார்பாக மனுக்களை சமர்ப்பித்திருந்தனர். இந்த 20 ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதி மன்றத்தின் தீர்மானம் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியளவில் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த மனுக்கள் இன்றையதினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர் குழுவினரால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் குறித்த திருத்தச் சட்ட மூலம் உரிய வகையில் சட்டமாக்கபட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் 3 இல் 2 பெரும்பான்மை வாக்குகளுடன் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிவிக்குமாறு மனு தாரர்கள் இந்த மனுக்கள் மூலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: