20ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு!

Sunday, September 20th, 2020

20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறான சூழ்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதன்பின்னர் இடம்பெறவிருக்கும் சம்பிரதாய வழிமுறை தொடர்பாக தெளிவுபடுத்தும் அறிக்கையை நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், “அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர், அதன் அரசியலமைப்புக்கு முரணான தன்மையை சவாலுக்குட்படுத்தி ஏழு நாட்களுக்குள் எந்தவொரு பிரஜைக்கும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

அவ்வாறு யாரும் சவாலுக்குட்படுத்தாவிட்டால் 20ஆவது திருத்தம் ஏழு நாட்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

என்றாலும், யாரேனும் குறிப்பிட்ட காலத்துக்குள் 20ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால், உயர் நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்யப்பட்ட திகதியில் இருந்து 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை வழங்கவேண்டும். இந்தக் காலப்பகுதியில் இந்த சட்டமூலம் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் நாடாளுமன்றத்துக்குள் மேற்கொள்ள முடியாது.

ஆனால், உயர் நீதிமன்றம் 21 நாட்களை எடுத்துக்கொள்ளாமல் அதற்கு முன்னர் தீர்ப்பை வழங்கினால், அதன்பின்னர் 20ஆவது திருத்தம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெறுவதுடன் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதனைத்தொடர்ந்து செயற்குழுவில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்ப்பதுடன் இதன்போது ஏதாவது திருத்தங்களை பிரேரிக்க சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

அதனைத் தொடர்ந்து சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு இடம்பெறும். மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு இடம்பெறும். இதன்போதும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்படவேண்டும். இதன்போது சட்டமூலம் அரசியலமைப்பாக அங்கிகரிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. இறுதியாக சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டதுடன் அது சட்டமாக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தத்தில் முழுத் திருத்தத்தையும் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உட்பிரிவுகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பும் தேவை என்ற தீர்மானத்துக்கு உயர் நீதிமன்றம் வருவதற்கும் இடமிருக்கிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: