18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022

இந்தாண்டுமுதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும், நான்கு முறை வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என, தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 18 வயது நிறைவடைந்த அனைவரது பதிவும் பெப்ரவரி 1 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

பெப்ரவரி முதலாம் திகதிமுதல் மே மாதம் 31 ஆம் திகதி வரையான நான்கு மாத காலப்பகுதியில் 18 வயதைப் பூர்த்தி செய்வோர் தனித்தனியாக வாக்காளராக பதிவு செய்ய முடியும் என தேர்தல் ஆணையாளரான சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஜூன்முதல் செப்டம்பர் வரை 18 வயது நிரம்பியவர் களுக்கான வாக்காளர் பதிவு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

அதன்படி, தேர்தல் அறிவிக்கப்படும் போது, சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பதிவேட்டின் துணைப் பட்டியல்கள், செல்லுபடியாகும் வாக்காளர் பதிவேட்டில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது 18 வயது பூர்த்தியாகும் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி விரைவில் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம்முதல் 18 வயது பூர்த்தியானவர்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களுக்குச் செல்லாமல் ஒன்லைனில் பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: