10 லொறிகளில் வன்னிக்கு அனுப்பிவைத்த வெள்ள நிவாரணத்துக்கு நடந்தது என்ன? – சதொச நிறுவனத்தின் தலைவர் விளக்கம்!

Friday, January 18th, 2019

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சதொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்தப் பொருட்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக அனுப்பி வைத்தது.

கிளிநொச்சி அரச அதிபர் இந்தப் பொருட்களை கொள்வனவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறைப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே உரிய நடைமுறை.

எனினும் அரச அதிபர் அந்த நடைமுறைக்கு மாற்றமாகச் செயற்பட்டு சதொச அனுப்பி வைத்த பொருட்களான அரிசி, மா, சீனி, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்களை எமது நிறுவனத்திலிருந்துகொள்வனவு செய்வதைத் தவிர்த்து  பருப்பை மாத்திரமே சதொசவிலிருந்து வாங்கினார்.

அரச அதிபர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென அந்தப் பிராந்தியத்தில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரிடமிருந்தே குறிப்பிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்ததாகவும் எமக்கு அறியக் கிடைத்தது. சதொச நிறுவனம் கொண்டுசென்ற பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சியில் உள்ள எமது நிறுவனத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களை மீண்டும் கொண்டுவருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரிடமிருந்து இந்தப் பொருட்களை கிளிநொச்சி அரச அதிபர் என்ன காரணத்துக்காக கொள்வனவு செய்தார் என எமக்குத் தெரியாது. எனினும் எமது விற்பனை விலையை விட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் சற்றுக் கூடுதலான விலையிலேயே அந்தப் பொருட்களை விற்றதாகவும் அறியவருகிறது.

எனவே பொதுமக்கள் சதொச நிறுவனத்தின் மீது வீண் பழிகளை சுமத்த வேண்டாம் எனவும் இந்தப் பிரச்சினைக்கு அரச அதிபரே பொறுப்பு எனவும் சதொசத்தின் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts: