யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் : கைதான மாணவர்களுக்கு பிணை!

Saturday, August 10th, 2019

மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் 7 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் நேற்று முன்தினம் புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது யாழ். பல்கலைக்கழக வாயிலில் இராணுவத்தினர் கடமையில் இருந்த நிலையில் இந்த மோதல் இடம்பெற்றது. எனினும் அவர்கள் தடுக்கவில்லை.

இந்நிலையில், மாணவர்களின் மோதலை ஒளிப்படம் எடுத்த பொது மகனை அச்சுறுத்திய இராணுவத்தினர், அவரது அலைபேசியில் இருந்த ஒளிப்படங்களை அழித்தனர்.

இந்த மோதல் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்கியுள்ள விடுதிவரை நீடித்தது. சம்பவத்தில் சிங்கள மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மாணவர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைது செய்தனர்.

அவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதிவான், அவர்கள் 7 பேரையும் பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

Related posts: