முறை தவறிய சாரதித்துவம்: 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம்!

Friday, September 20th, 2019

போக்குவரத்து விதிகளை மீறிய 16 சாரதிகளுக் கு 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 2 நாள்களில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 16 சாரதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சாரதிகளில் மூவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியுள்ளர். ஏனையோர் உரிய ஆவணங்களின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, 16 சாரதிகளும் தம் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றில் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு மாதம் இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் உரிய ஆவணங்களின்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டமும் 10 சாரதிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டமும் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் ஒரே நாளில் போக்குவரத்துக் குற்றங்களுக்கான 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது.

Related posts: