கொரோனா வைரஸ்: ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !

Monday, January 27th, 2020


நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரைக்கமைய தேசிய செயற்பாட்டுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த குழுவில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அத்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திரானி ஜயவர்தன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜயசிங்க உள்ளிட்ட 15 பேர் அடங்குகின்றனர்.

குறித்த குழு இன்று பிற்பகல் கூடி கொரொனா வைரஸ் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை துரிதமாக நாட்டுக்கு அழைத்து வருவதாற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை விசேட சலுகையை வழங்கியுள்ளது.

இதற்கமைய, சீனாவின் பீஜிங் மற்றும் கென்டன் விமானநிலையங்கள் ஊடாக நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பயணச்சீட்டுக்களுக்கான 50 சதவீத விலைச்சலுகை வழங்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போது சீனாவில் உள்ள மாணவர்களுக்காக விசேட விமான சேவைகளை செயற்படுத்துவதற்கும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் (றுருர்யுN) மற்றும் சிச்சுஆன் (ளுiஉhரயn) மாகாணங்களில் உள்ள இலங்கை மாணவரகளை துரிதமாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று வழங்கியுள்ளார்.

இதன்படி, சிச்சுஆன் மாகாணத்தில் செங்டு நகரில் உள்ள சுமார் 150 மாணவர்களை துரிதமாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளுக்கான மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தெனின் நகரில் உள்ள 30 மாணவர்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கல்விகற்று வரும் 790 பேர் தொடர்பான தகவல்கள் தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அவர்களையும் விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் சீனாவில் உள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் தொலை பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 0086 – 10 – 65321861 – 2 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேற்குறிப்பிட்ட தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் நோய்த்தொற்று தடுப்புக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எவருக்கு ஏனும் சுகயீனம் ஏற்பட்டதற்கான அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை ஐடிஎச் மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனமும் முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு வெளிவிகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: