வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் அழைப்பு!

Tuesday, December 7th, 2021

எதிர்த்தரப்பினர் பாதீட்டை தோற்கடிப்பதற்கு எடுத்திருந்த முயற்சியை சுயநலமற்ற வகையில் மக்கள் பணிக்கானதாக பயன்படுத்த முன்வந்திருந்தால் அது எமது பிரதேசத்தின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வேலணையை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்டபில் அவர் மேலும் கூறுகையில் –

எமது வேலணை பிரதேசமானது யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் மிக வருமானம்ங் குறைந்த சபைகளுள் ஒன்று.  வாழும் மக்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதனால் வரி உள்ளிட்ட வருவாய் ஈட்டல்களும் குறைவாக உள்ளது. ஆனாலும் அதிலிருந்து மீண்டு அவை படிப்படியாக கட்டமைக்க்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது சபையில் உறுப்பினர்களின் முன்மொழிவுக்காக ஒதுக்கப்படும் நிதியும் சில இலட்சம் ரூபாக்களாகவே இருக்கின்றது.

இதைக்கொண்டு எமது பிரதேசத்தின தேவைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாது. இது எமது அனைத்த உறுப்பினர்களுக்கும் தெரிந்ததொன்றே.

அதனடிப்படையில் அனைத்து உறுப்பினர்களும் பேதங்களின்றி எமது பிரதேசத்தின் தேவைகளை இனங்காண்பதும் அபிவிருத்திக்காக எவ்வாறு நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆரோக்கியமான விடயங்களை ஆராய்வதே சிறந்தது.

இதேநேரம் அவ்வாறு கடந்த காலங்களில் பல முன்மொழிவுகள் பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அவை சாத்திப்படாமல் போனமை அல்லது நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதங்கள் தொடர்பிலும் நாம் அக்கறை கொள்ள கொள்வேண்டும்.

அவ்வாறு நடைபெறாமற் போனமைக்கு வருத்தங்களை தெரிவிப்பதுடன் அவற்றையே தொடர்ந்தும் சுட்டிக்காட்டி  விவாதித்தக்கொண்டிராமல் அவற்றை நடைமுறையாக்குவதற்கான வழியை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்காற்றுவதும் அவசியம்.

அதுமட்டுமல்லாது எமது பிரதேச சபையின் ஆட்சிக்காலத்தை எமது கட்சி பொறுப்பேற்ற 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது கட்சி எதிர் கட்சியாகவே இருந்தது. அதனால் எமது சபைக்கான வருமானங்கள் ஒதுக்கீடுகளை மத்திய அரசால் அதிகளவாக கிடைக்கப் பெறுவதில் பல தடைகள் காணப்பட்டன.

இதேநேரம் இக்காலப் பகுதியில் சில திட்டடங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை பூரணமாகாத நிலையிலேயே உள்ளது. இதையும் பூணப்படுத்த வேண்டிய நிலைக்குள்ளும் எமது இந்த சபை தள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது நாம் ஆளும் கட்சியாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமை கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசிடமிருந்து பெற்று திட்டங்களை முன்னெடுப்பதில் கால தாமதங்கள் காணப்படுகின்றது.

ஆனாலும் எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விசேட முன்மொழிவுகளூடாகவும் அவரது அமைச்சின் உடாகவும் வாழ்வாதாரம் கட்டுமாணம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

அதேபோன்று பிரதேச சபையும் அதன் ஊழியர்களும் சுகாதாரம் உள்ளிட்ட தன்னாலான அனைத்து விடயங்களையும் முடியுமானளவு முன்னெடுத்தே வருகின்றது.

இவ்வாறான நிலையில் எமது சபையை அரசியலுக்காக அவமானப்படுத்துவதானது ஒவ்வொரு உறுப்பினர்களும் தம்மைத் தாங்களே பலவீனப்படுத்தவதாக அமைகின்றது.

அதுமட்டுமன்றி சபையின் ஆட்சியில் யார் அமர்ந்திருப்பது என்பது முக்கியமானதல்ல. அந்த ஆட்சிக்கு உறுப்பினர்களாகிய நாம் வழங்கும் வகிபாகம் என்பதுதான் முக்கியமானது.

பிரதேச சபை என்பது அபிவிருத்தியை மையாமாக கொண்ட ஒன்றானகவே இருந்து வருகின்றது. அதற்கான நிதி மூலதனங்களை பெறுவதற்கும் அதைச் செய்வதற்கும் வழிமுறைகள் இருந்தும் தவறவிட்டுள்ளோம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதேநேரம் எமது பிரதேச சபையின் அதிகார எல்லைக்கு அப்பாற் சென்று பல்வேறு விடயங்களை கதைப்பதாலோ அன்றி ஊடகங்களின் செய்திக்காகவோ கதைப்பது ஆரோக்கியமானதல்ல. இது எவ்விதத்திலும் மக்கள் நலனாகாது.

அதேபோன்று பிரச்சினைகளை இனங்கண்டு சபைக்கு தெரியப்படுத்தி தீர்வுகாண்பதே சபை உறுப்பினர்களின் பங்களிப்பாக இருக்கின்றது. ஆனால் இருக்கும் பிரச்சினைகளைவிடுத்து சுயநல அரசியலுக்காக முதலீடுகளை ஏற்க மறுப்பதும் அவற்றை தடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வேறுபல பிரச்சினைகள உருவாக்கி அதை ஊடகங்களுக்கு காண்பிப்பதும் ஆரோக்கியமானதொன்றல்ல.

அதேபோன்று எந்த அபிவிருத்தியிலும் ஒரு சிறு பாதகத் தன்மை இருக்கத்தான் செய்யும். அதற்காக அதை நிராகரிப்பதும் சிறந்ததொன்றல்ல.

எதிரணியினர் என்பது சபையில் எதிரியாக இருப்பது அல்ல. அவர்கள் சுயநலமற்ற ஆரோக்கியமான விடயங்களை, கருத்துக்களை ஆளும் தரப்பினருக்கு தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அநேகமானவை கூட்டமைப்பினரின் ஆளுகைக்குள்ளேயே இருக்கின்றது.  ஆனால் அவை ஒவ்வொன்றும் ஆட்சியமைப்பதற்கான முழுமையான பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை.

ஆனாலும் மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் ஒவ்வோர் பிரதேசத்திலும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக எமது கட்சி அந்த பிரதேச சபைகளை பொறுப்பேற்று ஆட்சி அமைக்க முன்தவந்தவர்களுக்கு பங்காளிகளல்லாது ஆட்சி அமைக்க ஆதரவை வழங்கியிருந்தது.

இந்த சபையை நாம் பொறுப்பெற்றிருந்த நிலையில் எமக்கு ஆதரவுக்கரத்தை ஶ்ரீலங்கா பெரமுனவும், ஶ்ரீலங்கா சதந்திரக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதரவுக் கரத்தை வழங்கியிருந்தன. அது தற்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவோ அன்றி பாதீட்டை தோற்கடிப்பதற்காகவோ பிரயத்தனத்தை முன்னெடுப்பதை விடுத்து அவ்வாறான முயற்சிகளை சுயநலமன்றி மக்கள் நலன் சார் தேவைகளுக்கு பயன்படுத்தினால் எமது பிரதேசமும் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அபிவிருத்தியாலும் உச்ச நிலையை எட்டமுடியும். அந்தவகையில் இந்தப் பதிவு யாரையும் குற்றம் சாட்டுவதற்காவோ விமர்சிப்பதற்காகவோ பதிவிடவில்லை. ஆரோக்கியமான செயற்பாடடை முன்னெடுப்பதற்கான ஒன்றாகவே அமைகின்றது. அதற்காக நாம் அனைவரும் பாடுபடுவோம் அதுவே சிறந்தது.

0000

Related posts: