வெளிவருகின்றது கல்விப் பொது தராதர பரீட்சைப் பெறுபேறுகள்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவிப்பு!

Sunday, April 26th, 2020

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார முற்பகுதிக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கையின் இறுதி கட்ட பணிகள் தற்டபோது இடம்பெற்று வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பெறுபேற்று சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு வலய மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்காக கடவுச்சொல் மற்றும் பயனருக்கான பெயர் ஆகியன வழங்கப்படவுள்ளது.

அதேநேரம், விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பதுடன், தற்காலிகமான பெறுபேற்று பத்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் சுகாதார நடைமுறையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: