வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை – துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, July 17th, 2021

நோய்வாய்ப்பட்டு, வீடுகளைவிட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில், மாவட்ட மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், நோய்வாய்பட்டு, வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது சிக்கலாக உள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் அல்லது விசேட தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தகவல்களைப் பெற்று, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில், கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக இனங்காணப்பட்டுள்ள கொவிட் நோயாளிகள் மற்றும் உயிரிழந்தவர்களில் அதிக சதவீதமானோர், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் அது தொடர்பில் அறிவூட்டுவது குறித்தும், தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு மக்களை உட்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்ற முடியுமென, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள், 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளன. எனவே, குறித்த துறைகளில் விசேடமான எழுச்சியைக் காண முடியுமென, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எந்தவொரு துறையிலும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவருக்குத் தடுப்பூசி ஏற்றும் எந்தவோர் இடத்திலும், இலகுவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆயுர்வேத மத்திய நிலையங்களில் கொவிட் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடிந்துள்ளதாக, சுதேச மருத்துவத்துறை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார். இங்கு சிகிச்சை பெற்ற எவரும் மரணமடையவில்லை என்பதுடன், விரைவாகக் குணமடைந்திருப்பது பற்றிய விசேட ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை, அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது சுட்டிக்காட்யுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக, சுதேச ஔடதங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: