விவசாய துறையின் அனைத்து நிதி திட்டங்களுக்கும் அங்கீகாரம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, January 2nd, 2023

விவசாயத் திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக 2023 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளுக்கு தேவையான நிதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ரன்மினிதன்னவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கமநல அபிவிருத்திச் சட்டம் தொடர்பில் அமைச்சர் அமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது – நாட்டில் 47,000 ஏக்கர் பயிரிடப்படாத நெற்பயிர்கள் உள்ளதாகவும், 14,000 ஏக்கர் நிலம் இந்தாண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும், ஐந்து வருடங்களாக பயிரிடப்படாத வயல்களை தரிசு வயல்களாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

விவசாய சமூகம் 2023 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், திட்டங்களுக்கு தேவையான நிதி ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் விவசாயத்துறை மற்றும் விவசாயிகளின் அபிவிருத்திக்காக பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

கடந்த வியாழக்கிழமை 400 கோடி ரூபாவும், வெள்ளிக்கிழமை 200 கோடி ரூபாவும் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் நடவடிக்கை அடுத்துவரும் இரண்டு வாரங்களில் முழுமையாக நிறைவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி விவசாயிகளுக்காக 800 கோடி ரூபாவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: