விரைவில்கிராம உத்தியோகத்தர் நியமிப்பதற்கான போட்டி பரீட்சை முடிவுகள்!
Friday, July 7th, 2017
நாடுபூராகவும் உள்ள கிராம உத்தியோகத்தர் பணிக்கு 1700 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையின் பெறுபேறு விரைவில் வெளியிடப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு எம்.பி தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தினேஷ் குணவர்த்தன எம்.பி , நாடு பூராகவும் பரந்துள்ள கிராம சேவகர் பிரச்சினை வெற்றிடம் 2000 மேல் உள்ளன. இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தி பெறுபேறுகளும் விரைவில் வெளியாகவுள்ளன. இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை மையமாக கொண்டு ஓய்வு பெற்ற கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது பெரும் அநீதியாகும். போட்டி பரீட்சையில் தேர்ந்தெடுத்தவர்களை இணைக்க முடியுமாக இருக்க ஓய்வு பெற்றவர்களை ஏன் சேர்க்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பினார் இதற்கு அமைச்சர் வஜிர அபேவர்தன பதிலளிக்கையில்,
இலங்கையில் காணப்படும் 14022 பிரதேச செயலகப் பிரிவில் 1700 கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இதன்பிரகாரம் நாடுபூராகவும் கிராம சேவகர்களுக்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு தற்போது பெறுபேறுகள் வெளியிட மாத்திரமே மீதமாக உள்ளன. கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களுக்கு போட்டி பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இணைக்கவுள்ளோம். வடக்கிலும் பெருமளவில் கிராம உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது. புதியவர்களை நியமிக்கும் வரைக்கும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு பெயர்ப் பட்டியல் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளேன்.
கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2010 ஆம் ஆண்டு சுற்று நிருபம் பிரகாரமே நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனவே போட்டி பரீட்சை பெறுபேறு விரைவில் வெளியிடப்படும். அதன்பின்னர் உரியவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். அதன்பின்னர் கிராம உத்தியோகத்தர் பதவிக்கு இணைக்கப்பட்ட ஓய்வு பெற்றவர்களின் பதவி தானாக இரத்தாகும் என்றார். இதன்போது கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எழுந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியபோது, அதற்குசபாநாயகர் கருஜெயசூரிய இடமளிக்க வில்லை. நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிரணி சார்பாக தினேஷ் குணவர்தனவிற்கு மாத்திரம் கேள்வி எழுப்ப முடியும்.நிலை யியற் கட்டளைக்கு எதிராக செயற்பட முடியாது என சபாநாயகர் கருஜயசூரிய குறிப் பிட்டார்.
Related posts:
|
|