விமான நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் – பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Friday, May 26th, 2023

இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களின் பிரவேசிக்கும் பகுதிகள் ஊடாக வெளியேறும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் பொதிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்த விமான நிலையத்தின் சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, பிரமுகர்களின் பிரவேசிக்கும் பிரிவு வழியாக விமான நிலையத்திலிருந்து செல்கின்ற மற்றும் வருகின்ற அனைத்து அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்த சோதனைகள் கடுமையாக்கப்பட்டதன் பின்னர், குறித்த பகுதி வழியாக வந்த உயரதிகாரி ஒருவர் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த மின் உபகரணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை எடுத்து வந்த போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த பிரமுகர்களின் பகுதி வழியாக வரும் பிரமுகர்களை சோதனையிட சுங்கத்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த பிரமுகர்களின் வழி ஊடாக நீண்ட காலமாக பிரமுகர்கள் பெருமளவிலான தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழி மூலம் தங்கம், இரத்தினங்கள், பணம் மற்றும் போதைப்பொருட்கள் கூட நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நம்புவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

குறித்த பகுதிகளில் பிரவேசிக்கும், வெளியேறும் பிரமுகர்களை உரிய முறையில் சோதனை செய்ய சுங்கத் தலைமையகத்தில் இருந்து கடுமையான உத்தரவு வந்துள்ளதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: