வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்!

Wednesday, August 2nd, 2017

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம், குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோகர்  நிஷாந்த சில்வா சாட்சியமளிக்கவுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோகர்  நிஷாந்த சில்வாவிடம் கடந்த 24ஆம் திகதியும் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் சாட்சியப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, கடந்த சாட்சியப் பதிவின் போது மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துஷாந்தனின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சியமளிக்கப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தில் சாட்சியப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை, தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இந்த சாட்சியப் பதிவுகள் இடம்பெறவுள்ளன.

Related posts: