வித்தியா படுகொலை: சிறிகஜனின் தலைமறைவு தொடர்பில் விசாரண செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Thursday, July 4th, 2019

2015 இல் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் உதவி பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்குமார் என அறியப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் காவல்துறை காவலில் இருந்து விடுவிக்க உதவியதன்மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன்மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, முதலாவது சந்தேகத்துக்குரியவரான வடக்கு மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகத்துக்குரியவர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், இரண்டாவது எதிரி எங்கே? அவர் தொடர்பில் தகவல் உண்டா? என்று வழக்குத் தொடுனரிடம் மன்று கேள்வியெழுப்பியது.’இரண்டாவது எதிரி சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை. அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார். அத்துடன், இந்த வழக்கை முன்னெடுக்க சட்ட மா அதிபரால் சிறப்பு அரச சட்டவாதி சட்டமா அதிபரால் நியமிக்கப்படுவார் எனவும் அரச சட்டவாதி மன்றுக்கு அறிவித்தார்.

இதையடுத்து, இரண்டாவது எதிரி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கிய மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

இதனிடையே மாணவி வித்தியாவின் கொலையாளியை காப்பாற்ற முயற்சித்தார் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகளால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts: