வித்தியா கொலை வழக்கு : தலைமறைவாகவுள்ள ஸ்ரீகஜனுக்கு  பிடியாணை!

Tuesday, December 5th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

மேலும் இதுவரை இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அறிக்கையினை அரச சட்டவாதி நிசாந்த் நேற்று (05) மன்றில் சமர்ப்பித்து அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்தார்.

இவ்வழக்கின் முக்கிய சந்தேகநபரும் சம்பவம் இடம்பெற்றவேளை யாழ்.பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது தலைமறைவாக இருந்துவரும் சிறிகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையினை நீதிபதி இதன்போது பிறப்பித்தார்.

அத்துடன் அவர் தொடர்பான சகல ஆவணங்களையும் அடையாளத்திற்குட்படுத்தி அவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கும் அந்த உத்தரவை அனுப்பிவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.மேலும் இவ்வழக்கு வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Related posts: