வாகன நெரிசலை எதிர்கொள்ள இலகு ரயில் சேவை!

Saturday, May 6th, 2017

கொழும்பு மாநகரில் ஏற்பட்டிருக்கும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவென இலகு ரயில் சேவை மற்றும் மாற்றுப்பாதைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக மாநகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏழு முக்கிய வீதிகளிலே இந்நிலைக் காணப்படுகின்றது. விசேடமாக, அரச அலுவல்கள் பத்தரமுல்லைக்கு மாற்றப்பட்டுள்ளதால் பத்தரமுல்லை முதல் கோட்டை வரையிலான வீதி கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையைத் தவிர்ப்பதற்காக நாங்கள் வீதி அபிவிருத்திப் பணிகளுடன் விசேட திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

கொழும்பில் அண்மையில் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பஸ்களுக்கான புதுவழித்திட்டம் வெற்றியளித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன், கொழும்பு நகரிலுள்ள அரச அலுவலங்கள் அனைத்தும் பத்தரமுல்லைக்கு மாற்றும் தூரநோக்குடனான திட்டத்துடன் செயலாற்றி வருகின்றோம். விசேடமாக, சகல மாற்றுப்பாதைகளையும் உருவாக்குவதுடன் பத்தரமுல்லை முதல் கோட்டை வரை இலகு ரயில் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்

Related posts: