வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு – எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளது – சுங்கத்திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023

வாகன இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளதாக இலங்கை சுங்கத்துறை அறிவித்துள்ளது.

தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தலைமையில் கூடிய போதே இலங்கை சுங்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை சுங்கத்தின் வருமானமாக 1226 பில்லியன் ரூபாய் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த 5 மாதங்களில் 330 பில்லியன் ரூபாயே கிடைத்துள்ளதாகவும் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 3 வருடங்களாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் சுங்கவரி வருமானம் குறைந்துள்ளதுடன் இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியுடன் தொடர்புடைய அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சுங்கம் இந்த காலப்பகுதியில் 923 பில்லியன் ரூபாய் நிதியை ஈட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாகன இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் துரிதமாக முடிவெடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: