வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை நவீனப்படுத்த நடவடிக்கை!

Saturday, March 25th, 2023

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்..

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது மற்றும் தணிக்கும் போது மேற்படி திணைக்களத்தின் முன்னறிவிப்பு இன்றியமையாதது, எனவே உலக வங்கியின் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி போன்ற நிறுவனங்களை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘தலைமுறைகளை தாண்டிய வானிலை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம்’ என்பது 2023 ஆம் ஆண்டுக்கான உலக வானிலை தினத்தின் நினைவு விழாவின் கருப்பொருளாக அமைந்துள்ளது.

மேலும் உரையாற்றிய அவர், மேம்பட்ட தரவுகளின் அடிப்படையில் புதுப்பித்த வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இது விவசாயம், மின்சாரம், மீன்பிடி, சுற்றுலா போன்ற பிற துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் அதன் பங்களிப்புகள் நிதி அடிப்படையில் அளவிட முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.

மாறிவரும் காலநிலை மற்றும் புவியியல் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேகமாக வளர்ந்து வரும் உயரமான மற்றும் உயர் குடியிருக்கும் கட்டிடங்களின் தரப்படுத்தல் மற்றும் கடுமையான கட்டிடத் தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இதன்போது எடுத்துரைத்தார்.

இதனிடையே வளிமண்டலவியல் திணைக்களம் அதன் பாரம்பரியங்களை பேணுவதன் மூலம் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் திறம்பட உருவாகியுள்ளது.

எந்த அனர்த்தங்களையும் அல்லது அவசரகால சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளனர்.

புவியியல் சீர்குலைவுகளை முன்னறிவிப்பது கடினமாக இருந்தாலும், அத்தகைய அனர்த்தங்களால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என இந்த நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: