வற்றாப்பளை உற்சவத்திற்கு தடை; பக்கதர்கள் கவலை!

Saturday, May 8th, 2021

முல்லைத்தீவில் இதுவரை 16 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வற்றாப்பளை கண்ணகை அம்மன் உற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொது மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதைய கோவிட் 19 நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் – மாவட்டத்தில் 16 பேர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 101 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மாங்குளம் தள வைத்தியசாலையில் சிற்றூழியராக பணியாற்றிய ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய 12 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாங்குளம் மருத்துவமனை செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூழியர் ஒருவருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. மாஞ்சோலை மருத்துவமனையில் தொற்று பாதுகாப்பு தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையினர் ,வைத்திய அதிகாரிகள் மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட பொது மக்களுக்கான அறிவித்தலாக அநாவசியமாக வீதிகளில் செல்ல வேண்டாம், அத்தியாவசியமாக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்து சுகாதார நடவடிக்கையினை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்து வருகின்றது.

எனவே மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும். இந்நிலையில் எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு தொடர்பிலும் கூட்டம் ஒன்று நடைபெற்றதுடன், முப்படையினர், சுகாதார பிரிவினர், ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் பொதுமக்கள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் உற்சவத்தில் பங்குபற்றுவதை தவிர்த்து கொள்ளுமாறும் ஆலய நிர்வாகத்தினரால் கிரிகைகள் மட்டும் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: