வற்வரி சட்டமூலம் நாளை சபையில்!
Monday, October 3rd, 2016
அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள திருத்தப்பட்ட வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் நாளை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 13 ஆம் திகதி திருத்தபட்ட வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையிலேயே நாளை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 11 வீதத்திலிருந்து 15 வீதமாக வற்வரியை அதிகரிக்கும் நோக்கில் வற்வரி சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளது.
ஏற்கனவே வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் கடந்த மே மாதம் 2 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது. எனினும் தேசிய சுதந்திர முன்னணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வற்வரி சட்டமூலம் உரிய அரசியல் அமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையிலேயே அரசாங்கம் உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய வற்வரி சட்டமூலத்தை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றதுடன் தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts:
|
|
|


