வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும் – இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ வலியுறுத்து!

Sunday, December 5th, 2021

எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் இடம்பெறும் ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் – ஒமிக்ரோனால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு செல்வந்த நாடுகள் வலுவான விதத்தில் உதவவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேநேரம் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியநாடுகளின் தாராள மனப்பான்மையை பாராட்டுவதாகவும் இந்த நாடுகள் நேரடியாகவோ அல்லது கொவக்ஸ் திட்டத்தின் மூலமாகவோ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை உலகின் ஏனைய பகுதியில் மிகவும் குறைந்தளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் உருவாகியுள்ளது என்றும் இதனை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த வைரசினை எதிர்கொள்வதற்கு போதுமானவையல்ல என்பதால், உலகம் மீண்டும் முன்னைய ஆபத்தான நிலைக்கு திரும்பலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எல்லைகள் மூடப்படுவது, முடக்கல்கள் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் எனவும் இதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: