வறட்சியான காலநிலை : யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

Saturday, April 6th, 2019

வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் வறட்சிப் பாதிப்புக்குள்ளான ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிதித் தொகை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

 “நாட்டில் தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று சில பிரதேசங்களில் காடுகளில் தீப்பரவல் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரதேசங்களுக்கு 13 தாங்கிகளில் நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்குத் தேவையான நிதி அந்த மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

யாழ். மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இது வரையில் பாதிக்கப்பட்டுள்ள சகல மாவட்டங்களுக்கும் 207 தண்ணீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான திடீர் அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக முப்படையினர் சகல மாவட்டங்களிலும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக விமானப்படை மூலம் திடீர் தீப்பரவல் இடம்பெறுகின்ற பிரதேசங்களுக்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 117 என்ற அவசர தொலைபேசி சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தேவையான உதவிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: