வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோசனை!

Sunday, January 16th, 2022

வருடத்தில் மீதமுள்ள காலத்திற்கு தடையின்றி எரிபொருளை விநியோகிக்க வேண்டுமாயின், இந்தியாவிடம் இருந்து கிடைக்க உள்ள 500 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் நான்கு பில்லியன் டொலர்கள் அவசியம் என தெரியவருகிறது.

இந்த நான்கு பில்லியன் டொலர்களை எப்படி தேடுவது என்பது தொடர்பாக கலந்துரையாட ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் மின்சார துறைகளுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க வேண்டுமாயின் தமக்கு டொலர் தேவைப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி தலைமையில் மேற்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மாதாந்தம் தேவைப்படும் எரிபொருள் தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு 90 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொன் டீசலும், 90 ஆயிரம் மெற்றி தொன் கச்சாய் எண்ணெயும் தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் இன்றைதினமும் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்கப்பெற்ற 3 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் தொடர்ந்து போதுமானதாக உள்ளமையினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் அந்த சபையின் மேலதிக பொது முகாமையாளரும் பேச்சாளருமான எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகளவான மின்சார தேவை ஏற்படாதவிடத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை குறித்த எரிபொருள் போதுமானதான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் நாட்களில் மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: