வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது அல்ல – மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு.

Tuesday, November 14th, 2023

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் 2022 ஆம் ஆண்டின் பின்னரான இலங்கையின் நிலையை மாற்றியமைப்பதற்காக மக்களின் தேவையை உணர்ந்த பாதீடாடி அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்  – நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பல்வேறு சலுகைகளை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க விடயம். அத்துடன் குறிப்பாக வடக்கு கழிக்கை மையப்படுத்தி பல முன்மொழிவுகளை வெளியிட்டிருப்பது எமது மாகாணங்களுக்கு சிறந்ததாகும்.

இதேவேளை சிலர் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு வரவு செலவு திட்டத்தில் சலுகைகளை வழங்கியிருக்கிறார் எனக் கூறுவது அவர்களின் அரசியல் நீதியான கருத்துக்களாகப் பார்க்கிறேன்.

ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாட்டை தலைமையேற்று மக்கள் பொருள்களுக்காக வரிசையில் நிற்காத நிலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் விழுந்ததற்கு கடந்த ஆட்சிக்காலங்களில் பங்கெடுத்தவர்கள் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார்கள் அவர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் மொத்த வருமானத்தில் துண்டு விழும் தொகை அதிகமாக இருப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம்.

ஆனால் அதனை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சாதகமான நிலைப்பாட்டை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போதைய வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம், வடக்கு கிழக்கு மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் மீனவர்களுக்கான நலத் திட்டத்திற்காக உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்காக பல மில்லியன்கள் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே  எதிர் கட்சிகள் தமது சொந்த அரசியலுக்காக  தேர்தலை இலக்காகக் கொண்ட வரவு செலவு திட்டம் எனக் கூறுவது நியாயம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: