வட்டுக்கோட்டையில் வைத்தியர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, March 13th, 2021

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் வட்டுக்கோட்டையில் மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 409 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத் தொகுதி பணியாளர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருவருக்குக் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டு நுழைவுவிசைவுக்கு (விசா) விண்ணப்பித்த மாணவன். மற்றையவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவர்.

மல்லாவி மீன் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் ஆலய மகா சிவாரத்திரி திருவிழாவுக்கு கடை அமைத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் வீதி சீரமைப்புப் ணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” – என்றார்.

Related posts: