பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அருவருப்பானது – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Tuesday, October 13th, 2020

முல்லைத்தீவு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அருவருப்பான செயற்பாடு என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஊடக இயக்கம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் – “முல்லைத்தீவு முறிப்பு காட்டுப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் மரக் கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மரக் கடத்தல்காரர் உள்ளிட்ட குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இரு ஊடகவியலாளர்களும் முல்லைத்தீவு நீதித்துறை, மருத்துவப் பொலிஸ் பிரிவில் புகார் செய்து, சிகிச்சைக்காக முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் ஐந்தாம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் அழிவு பற்றிய செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் காண்கிறோம். இந்தப் பின்னணியில் இதில் ஈடுபடுவோர் மீது வலுவான சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்த சட்டவிரோத செயல் குறித்து அறிக்கையிடச் செல்லும் ஊடகவியலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், மொனராகலை கும்புகன் ஓயா பாலம் அருகே சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை அறிக்கையிடச் சென்ற இந்தூனில் விஜேநாயக்க என்ற பத்திரிகையாளரும் ஒக்டோபர் மூன்றாம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற விரும்பத்தகாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளாமல் ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை சுதந்திரமாகத் தொடர வேண்டுமானால், குறிப்பிட்ட நபர்கள் மீது தகுதி, தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: