வடமாகாணப் பிரதம செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் – மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவு
Wednesday, May 4th, 2016சுன்னாகம் நீர் மாசு விவகாரம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கில் இன்றைய தினமும் மல்லாகம் மாவட்ட நீதவான் வாசஸ்தலத்தில் வடமாகாண விவசாய அமைச்சர் தனது சட்டத்தரணியூடாக ஆஜரானார் . இதன் போது எதிர்வரும் வழக்குத் தவணைகளின் போது வடமாகாண விவசாய அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை எனத் தெரிவித்த நீதவான் அடுத்த வழக்குத் தவணையின் போது வடமாகாணப் பிரதம செயலாளரே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் அழைப்பாணை பிறப்பித்தார்.
சுன்னாகம் நீர் மாசு தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை(03-05-2016) மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
கழிவெண்ணை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை காலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் வலிகாமம் பகுதியிலுள்ள கிணற்று நீரைக் குடிக்கலாமா ? இல்லையா ? என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே, இது தொடர்பில் தெரிவிக்கவும் , நொதேர்ன் பவர் நிறுவனத்தை மூடிய பின்னர் கழிவெண்ணையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக் குறைந்திருக்கிறதா ? என்பது தொடர்பில் தெரிவிக்கவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் -04 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் வடமாகாணப் பிரதம செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் கழிவெண்ணை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்தும் தனியாக நடாத்த முடியாதெனவும் , ஏற்கனவே மல்லாகம் நீதிமன்றத்தில் நீர் மாசு விவகாரம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரால் தாக்கல் செய்த வழக்குடன் இணைந்தே நடத்த முடியுமெனவும் நீதவான் இதன் போது தெரிவித்தார்.
வடமாகாண சபை ஏற்கனவே நிபுணர் குழு மூலமும், ரேடர் மூலமும் ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே , மேற்கண்ட வழிமுறைகளின் ஊடாக ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டார்.
Related posts:
டிசம்பர் 31 ஆம் திகதியில் ஒரு விநாடி கூட்டப்படுகிறது!
மக்களை மறந்தமையினால்தான் ஐ.தே.க.வுக்கு இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டது - அக்கட்சியின் முன்னாள் நாடாளும...
யாழ்ப்பாணம் வருகைதரும் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க!
|
|