வடக்கின் முதல்வருடன் நேரில் பேச முடியவில்லை – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விசனம்!
Friday, November 4th, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்திக்க முடியாமல் இருப்பதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சரை, உறுப்பினர்களாகிய எம்மால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைப் பொது நிகழ்வுகளிலும், கூட்டங்களிலுமே காணக்கிடைக்கின்றது. என்று ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக் குழுவுக்கு ஆவணங்களை கையளிப்பதற்கு, வடக்கு மாகாண தலைமைச் செயலகத்துக்கு நேற்றுக்காலை ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வந்திருந்தார். அறிவிக்கப்பட்டதற்கு அமைவாக அந்தக்குழு ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் ஆவணங்களை – வடக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை – முதலமைச்சரிடம் நேரில் கையளிப்பதும் முடியாத காரியம். முதலமைச்சரை உறுப்பினர்களான எம்மால் கூட இலகுவில் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருக்கின்றது. அவரை நேரில் சந்திக்கவும் முடியாது. பொது நிகழ்வுகள், கூட்டங்கள் தவிர்ந்து அவரை நேரில் காணவும் முடியாது. இதனால் ஆவணங்களை எப்படி ஒப்படைப்பது என்பது தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திக்க முடியாமல் இருப்பதாக மாகாணசபை அமர்வுகளிலேயே பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


