ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!

Wednesday, March 9th, 2022

ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய பொருளாதாரத்தை இலக்குவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், நாளொன்றுக்கு மேலதிகமாக 400,000 பீப்பாய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியும் என வெனிசுவெலா தெரிவித்துள்ளது.

ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றீடாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகள், நாளொன்றுக்கான எண்ணெய் உற்பத்தியை 800,000 பீப்பாய்களில் இருந்து 1.2 மில்லியன் பீப்பாய்கள் வரையில் அதிகரிக்க முடியும் என வெனிசுவெலா எரிபொருள் சம்மேளனத்தின் தலைவர் ரெனால்டோ குயின்டேரோ தெரிவித்துள்ளார்.

இதனூடாக வட அமெரிக்க சந்தைக்கான எரிபொருளை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், யுக்ரைனில் நேற்றைய தினம் 13 ஆவது நாளாகவும் போர் இடம்பெற்றுள்ளது. தலைநகர் கிவ் ஐ அண்டிய நகரங்களான இர்பின் மற்றும் சுமி முதலான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நேற்றையதினம் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொதுமக்களை வெளியேற்றுவதற்காக, இன்றையதினமும் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

யுக்ரைனில் இருந்து சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: