ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்குவதை திறைசேரியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.

Wednesday, February 21st, 2024

ரயில் கடவைகளில் பாதுகாப்பான சமிக்ஞை முறைமையை ஏற்படுத்துவதற்கு குறைந்த செலவில் முறையொன்றை முன்வைத்த போதிலும், இதுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (20) தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் திறைசேரி அறிக்கைகளை கோருவதாலே, இத்திட்டம் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆராச்சிக்கட்டுவ ஆனவிலுந்தாவ மையவயில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்: – முன்பு நிறுவப்பட்ட சமிக்ஞை அமைப்புகளுக்கும் எனக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை. இம்முறைகளுக்கு பெரும் செலவு ஏற்பட்டுள்ளதால், ரயில்வே சமிக்ஞை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தேன்.

நாட்டில் தனியார்துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட சட்ட நிறுவனங்களை ஒன்றிணைத்து 15 இலட்சத்திற்கும் குறைவான செலவில் இந்த சமிக்ஞை கடவை அமைப்பை உருவாக்கவே இந்த அமைச்சரவை பத்திரத்தை நான்,சமர்ப்பித்தேன்.

இது மணிகள் மற்றும் விளக்குடன் காவல் கூடத்தையும் கொண்டது. இம்முன்னோடித் திட்டம் கடந்த பௌர்ணமி தினம் கொடகமயில் ஸ்தாபிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. தற்போது நீண்ட நாட்கள் கடந்துவிட்டன. 15 இலட்சத்தில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வீதி விபத்துத் தடுப்பு நிறுவனத்திடமிருந்தும் மீதிப் பணத்தை சமூகப் பாதுகாப்புக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்த்தோம்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எனக்கு ஆதரவளிப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே இது தொடர்பில் மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அங்கு, திறைசேரி பல்வேறு விடயங்களைக் கேட்கிறது.

இதற்கு யார் நன்கொடை வழங்குகிறார்கள்? எனக் கேட்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், அமைச்சின் பொறுப்புக்களை சரியாக செய்ய முடியாது.

எனவே, அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிவித்து ரயில் மற்றும் இ.போ.ச இரண்டையும் திறைசேரியிடம் ஒப்படைக்கவுள்ளேன்.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வளவு முயற்சி செய்தாலும் குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதற்குள் மக்கள் இறந்துவிடுகின்றனர்.

இ.போ,ச,வில் 66 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு இடம்பெறவில்லை. இதற்கான நடைமுறையை உருவாக்க முயற்சிக்கும்போது, ​​குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

எனவே, அமைச்சர் என்ற வகையில் எனக்கும் எனது நிறுவன தலைவர்களுக்கும் இதைச் செய்வது கடினம். இதனால், ரயில்கள் மற்றும் பஸ்வண்டிகளை இயக்குவதை திறைசேரியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.

மேலும், ரயில்வே நிலத்தை யாரிடமும் ஒப்படைக்க நாங்கள் முடிவு செய்யவில்லை. இதற்காக நான், சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் இழுத்தடிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்’தக்கது

Related posts: