யாழ். மாவட்டத்தில் கடற்றொழில்சார் முதலீடுகளுக்கு இலகு வழிமுறை!

Wednesday, May 12th, 2021

யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் சார் பண்ணைளை அமைக்க விரும்புகின்றவர்களுக்கு இலகுவான வழிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கடலட்டை மற்றும் இறால் பண்ணைகள் உட்பட மீன் வளர்ப்பு திட்டங்களை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவான பொருளாதார வருமானத்தினை பெற்றுத் தரக்கூடிய குறித்த முயற்சி தொடர்பாக கடற்றொழிலாளர் மற்றும்  முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கான  வழிமுறைகளை இலகுவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடற்றொழிசார் பண்ணை அமைக்க விரும்புகி்றவர்கள், அதுதொடர்பான விண்ணப்பத்தினை கடற்றொழில் திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், குறித்த விண்ணப்பம் தொடர்பாக நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு அனைத்து அனுமதிகளையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொறிமுறை, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வார காலத்தினுள் பூர்த்தி செய்வதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: