யாழ். போதனா வைத்தியசாலைக்கு 100 சி.சி.ரி.வி. கமராக்கள்- வைத்தியசாலைப் பணிப்பாளர் !

Tuesday, May 8th, 2018

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என வருகைதரும் நிலையில் நோயாளர்கள் பல அசௌகரியங்களையும் எதிர்கொள்வதாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யப் பல வழிகளிலும் நாம் முயன்று வருகின்றோம்.

உதாரணமாக சில தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. அண்மையில்கூட ஒருவர் வைத்தியசாலைப் பணியாளர் போன்று பாசாங்கு செய்து நோயாளரின் தங்க ஆபரணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.

இதனால் நோயாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் நாம் முடிந்த வரையான பாதுகாப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இதில் ஓர் அங்கமாக தற்போது 30 சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்தியுள்ளோம்.

நுழைவாயில் நடை பாதைகள் மற்றும் முகப்பு பகுதிகளை உள்ளடக்கி தற்போது இவை பொருத்தப்படுகின்றன. இதன்மூலம் நோயாளர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தைக் கட்டுப்படுத்துவதே நோக்கமாகும்.

இதேநேரம் சில நோயாளர்கள் நீண்ட நேரத் தாமதம் முறையற்ற அணுகுமுறை தொடர்பில் எதிர்காலத்தில் சுமத்தப்படும் குற்றச்செயல்களின் உண்மைத் தன்மையை அறியும் வகையில் முக்கிய இடங்களிற்கும் கமராக்கள் பொருத்தப்படவுள்ளது.

இவ்வாறு பொருத்தப்படும் கமராக்களை கண்காணிக்க பகலில் இரு சுற்றாக இரு பணியாளர்களும் அதற்கென அமைக்கப்பட்ட கண்காணிப்புப் பிரிவில் இயங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related posts: