யாழ். பல்கலை சம்பவத்தை  தெற்கு  இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலையளிக்கின்றது – இராஜாங்க அமைச்சர் டிலான்!

Wednesday, July 20th, 2016

அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வேதனையடைகிறோம். குறிப்பாக இந்த சம்பவத்தை தெற்கு இனவாதிகள் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை பார்க்கும்போது கவலையாக இருக்கின்றதென இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் இந்த நாட்டில் யாரும் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது.  குறிப்பாக பல்கலைக்கழகங்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நல்லிணக்கம் என்பது பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வேதனையடைகின்றோம். குறிப்பாக இந்த சம்பவத்தை தெற்கு இனவாதிகள் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை பார்க்கும்போது கவலையாக இருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவமானது எம்மைப் போன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கு பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த சம்பவத்தை தெற்கின் இனவாதிகள் தமது சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்தில் இளம் மாணவர்கள் கல்வி கற்கும்போது முரண்பாடுகள், பிரச்சினைகள் என்பன ஏற்படுவதுண்டு.  இது இயல்பான விடயமாகும். உலகில் எந்தவொரு பல்கலைக்கழத்திலும் இவ்வாறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம்பெறுவது வழமையாகும்.

காரணம் இளவயது மாணவர்கள் ஒரு சிறிய விடயத்திற்கும் உடனடியாக தமது பிரதிபலிப்புக்களை வெளியிட முற்படுவார்கள். இதன்போது இவ்வாறான முரண்பாடான  சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதால் உடனடியாக தெற்கின் இனவாதிகள் அதனை தூக்கிப் பிடித்துவிட்டனர்.

எனவே பல்கலைக்கழக மாணவர்கள் இந்த விடயம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும். இனவாதிகள் எக்காரணம் கொண்டும் அவர்களை பயன்படுத்தி இனவாத அரசியல் செய்வதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இடமளிக்கக்கூடாது. தெற்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பதை காண முடிகிறது. இது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்காக குரல் கொடுக்கும் எம்மைப் போன்ற தலைவர்களை அசௌகரியப்படுத்த வைக்கின்றது. நாங்கள் கவலையடைகின்றோம். எனவே இந்த விடயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்போதுமே பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சிறந்த சகவாழ்வு இருக்க வேண்டியது அவசியமாகும்.  அதாவது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டத்திலிருந்தே நாட்டின் நல்லிணக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும். உண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவமானது ஒருபெரிய விவகாரமே அல்ல. அது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறக்கூடிய ஒரு இயல்பான விடயமாகும்.   ஆனால் இந்த சம்பவத்தை வைத்து  இனவாதிகள்  செயற்படுகின்றமைதான்  கவலையாக உள்ளது என்றார்.

Related posts: