யாழ்.குடாநாட்டு மக்களிற்கு பொலிஸாரின் அவசர செய்தி!

Monday, April 22nd, 2019

மக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

அறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவரை யார்? என முதலில் விசாரியுங்கள். அதற்கு அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசர பிரிவு இலக்கம் 119 மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவலை வழங்குங்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கைப்பையுடனேயே வருகை தந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான பொதிகள், பெட்டிகளைக் கண்டவுடன் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்.எந்த நேரத்திலும் துரிதமாகச் செயற்பட பொலிஸார் தயார்நிலையில் உள்ளனர் என்றார்.

Related posts: