மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை – நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021

அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் அழைப்பாணை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள் தொடர்பான குழு இதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதற்கமைய, வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பும்போது மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி குறுஞ்செய்தி போன்ற சமகாலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் வழிமுறைகளைப் பயன்படுத்துவது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த குழு பரிந்துரைத்துள்ள திருத்தங்களை உள்ளடக்கிக் குடியியல் வழக்குக் கோவை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல – அமைச்சர்  டலஸ் அழகப்பெரும அறிவிப்பு!

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியுமெனவும் தெரிவித்துள்ளார்..

அத்துடன் எந்த நிறுவனமும் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அதுதான் ஜனநாயகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கியது என்றும் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

முன்பதாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரத்தை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்படவில்லை என்று விவசாய அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

இதனையடுத்து, சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு சீனா சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: