இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு – புதிய வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பித்து வைப்பு!

Saturday, March 11th, 2023

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம்முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது.

கடந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பணம் 475 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் சட்ட ரீதியாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

குறித்த தொழிலாளி இலங்கைக்கு அனுப்பிவைத்த பணத்தில் பாதிக்கு சமமான CFI மதிப்புடைய மின்சார வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.மேலும், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலுத்த வேண்டிய வரியை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்துக்கு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: