யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையில் டெங்கு காய்ச்சலால் 4700 பேர் பாதிப்பு!

Friday, November 10th, 2017

யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டனர். இவ் வருடம் இது வரையில் 4700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்.பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்தார்.

பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்சலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கின்றது. கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 1700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வருடம் இதுவரையில் சுமார் 4700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போது யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகி வருகின்றது. இந் நிலையில் நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது.

எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது. உதாரணமாக மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெறமுடியாதுள்ளது.

எனவே அந்த மீன்குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவலாம். அதேபோல் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்க வேண்டும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts: