யாழ்ப்பாணம் தீவக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்குகிறது இந்தியா!

Monday, February 15th, 2021

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டமொன்று இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி அமைச்சருடன் அண்மையில்  பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதற்கான முழு செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தியாவின் நன்கொடையுடன் யாழ்ப்பாணத்தில் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில்  சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. குறித்த தீவுகள் மின்சார வசதிகளின்றி இருந்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கடந்த காலங்களில் பெரும் நிதி செலவில் ஜெனரேற்றர்கள் மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவே இன்றுவரை நழடமுறையளிலும் உள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த வாரம் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணத்தின் இந்த நெடுந்தீவு அனலைதீவு போன்ற தீவுகள் இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் இந்தியா இது தொடர்பில் மிகவும் அக்கறை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கே  இந்த திட்டத்தை இலங்கையே  முன்னெடுக்க வேண்டும் என்றும் இதற்கான நிதி உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இந்திய உயர்ஸ்தானிகர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து தெரிவித்த போது  – யாழ்ப்பாண மக்களுக்கு போதுமான வகையில் குறைவின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பதே மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் எனது முழுமையான நோக்கமாக இருக்கின்றது.

அந்த வகையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த யாழ்ப்பாணத்தின் அனலைதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது இந்த தீவுகளுக்கு டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் செலவு கூடியதாகும். அதனால்தான் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எனினும் இந்தியா இது தொடர்பில் அக்கறை செலுத்தி இருக்கின்றது. என்னை அண்மையில் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த திட்டத்தை முன்னெடுக்க முழுமையான நிதி செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்தார். இந்தியா கூறுகின்ற இந்த யோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

அதன்படி இந்தியா இவ்வாறு 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் பட்சத்தில் அந்த திட்டத்தை  இந்தியாவின் உதவியுடன் நாங்கள் முன்னெடுப்போம் என்பதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

Related posts: